நாகலாந்தில் தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 13 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்தின் மோன் மாவட்டம் ஓடிங் பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனையடுத்து வேலை முடிந்து அவர்கள் ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த மாவட்டத்தில் தேசிய சோஷியலிச பிரிவினைவாத அமைப்பின் கிளை அமைப்பான யுங்ஆங் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் அப்பகுதியில் தாக்குதல் நடத்த பாதுகாப்பு படையினர் தயாராக இருந்ததாக தெரிகிறது. அப்போது தொழிலாளர்கள் வந்த வேன் சத்தத்தை கேட்டு பாதுகாப்பு படையினர் தங்களது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதன் காரணமாக பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல பேர் பலத்த காயமடைந்து அண்டை மாநிலமான அசாமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வரான நெய்ப்யூ ரியோ தவறுதலாக சுடப்பட்டது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளார். இவ்வாறு அப்பாவி பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதால் நாகாலாந்து முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதனிடையில் பொதுமக்கள் அமைதி காத்து இருக்க வேண்டும் என முதல்வர் ரியோ கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அசாம் ரைபிள்ஸ் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.