மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசின் இரும்பு பெண்மணியாக உலாவந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தனது 68 வயதில் உயிரிழந்தார்.
இன்றுடன் அவர் மறைந்து 5 ஆண்டுகள் ஆகின்றது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் சென்னை மெரினாவில் உள்ள அம்மாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா அவர்கள் புறப்பட்டார். அவர் வரும் சாலையின் இருபுறமும் அதிமுக கழக கொடியுடன் தொண்டர்கள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா அவர்கள் மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.