அரவை இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் முகமது அஸ்ரப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜ்மா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் அஜ்மா தண்டையார்பேட்டை பகுதியில் இருக்கும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது அஜ்மா அணிந்திருந்த துப்பட்டா அரவை இயந்திரத்தில் சிக்கிவிட்டது.
மேலும் அரவை இயந்திரம் அஜ்மாவின் தலை முடியையும் பற்றி இழுத்ததால் பலத்த காயம் அடைந்த அவர் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் எந்திரத்தை நிறுத்தி அஜ்மாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காசிமேடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.