கூடங்குளத்தில் இந்த நிதி ஆண்டிற்குள் 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் நாடாளுமன்றத்தில் பல கேள்வி எழுப்பினார். அப்போது, கூடங்குளத்தில் 39,849 கோடி மதிப்பில் 3 மற்றும் 4வது அணு உலை பணிகள் 2023 ஆம் ஆண்டிற்குள் முடிவடைந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.6,700 கோடி நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனை போல ரூ.5677 கோடி மதிப்பில் கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.70 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் நடக்கும் முக்கிய பணிகளுக்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு என்ன காரணம்? என்றும் இந்தத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க படுமா? என்றும் கூடங்குளம் மற்றும் கல்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்டு வந்த மின்சாரம் எவ்வளவு? ஆகிய கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதல் உலை 2018 முதல் 2021ஆம் ஆண்டு வரை 18.273.26 மில்லியன் யூனிட் மின்சாரம், 2 வது உலை 12,365 மில்லியன் யூனிட் மற்றும் கல்பாக்கத்தில் 4245.39 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் உலையில் இருந்து 10463.43 மில்லியன் யூனிட் மின்சாரம், 2 வது உலையில் இருந்து 9351.35 மில்லியன் யூனிட் மின்சாரம் மற்றும் கல்பாக்கத்தில் இருந்து 3215.27 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி ஆண்டிற்குள் 5 மற்றும் 6-வது அணு உலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.