பாஜக அலுவலகங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படுவதற்கான உண்மையை தேசியத் தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.
திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாஜகவின் புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அம்மாவட்டத்தில் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து ஈரோடு, திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பாஜக புதிய அலுவலகத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதன்பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது: “தமிழகம் மிகவும் புனிதமான பூமி. இது தான் நம்முடைய தமிழ் கலாச்சாரத்திற்கு அடையாளமாக விளங்க கூடிய இடம் .திருவள்ளுவர் பிறந்த பூமி. இந்த பூமியை நான் வணங்குகிறேன்.
தமிழகம் பக்தி நிறைந்த பூமி. இந்த நாளில் திருப்பூர் மட்டுமின்றி ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்துள்ளது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. பாஜகவின் பணி என்பது சீராக கட்டமைக்கப்பட்ட பணி, பொதுவாக கட்சி அலுவலகங்கள் எல்லாம் தலைவர்களின் வீடுகள் இருக்கும். அந்த கட்டிடங்கள் அந்த தலைவர் போன பிறகு காணாமல் போய்விடும். ஆனால் நம்முடைய அலுவலகங்கள் என்பது காலம் காலமாக கட்சியின் தொண்டர்கள் இருந்து பணியாற்றுவதற்காக மிகப்பெரிய உத்வேகத்தை கொடுக்கும் இடமாக இருக்கும்.
வெளிப்படையான ஆட்சியை பாஜக விரும்புகிறது. தமிழ்நாடு வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் துணை நிற்கும். கொரோனா தொற்று உச்சம் தொட்ட போது ஒன்பது மாத காலத்தில் தீவிரமாக செயல்பட்டு தடுப்பூசி மூலமாக லட்சக்கணக்கான உயிர்களை பாதுகாத்தவர் மோடி. இன்றைக்கு 108 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தியுள்ளன. ஒருவர் தன் திறமையால் உயர முடியும் என்ற ஜனநாயக நெறிமுறைகள் அரசியல் கட்சிகளில் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பாஜக அலுவலகம் அமைக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் திட்டம். முன்னதாக கோவை விமான நிலையத்திற்கு வந்த அவரை பாஜகவினர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய தொழில் துறை இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.