தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்தமான் அருகே நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் அதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் குமரிப் பகுதி, தென் கடலோர தமிழ்நாடு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலும்,அவ்வபோது மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.