Categories
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை…. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்….!!!!

முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை பலப்படுத்துவதற்காக 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த, பராமரிப்பு பணிகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்ல தமிழகத்தை அனுமதிக்க வேண்டும். மேலும் வல்லக்காடு- முல்லைப்பெரியாறு காட்டு வழி சாலையை சீரமைக்க கேரள அரசுக்கு ஆணையிட வேண்டும் என்றும், தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது.

முன்னதாக முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை பலப்படுத்தும் நடவடிக்கையாக 15 மரங்களை வெட்ட கேரள அரசிடம் தமிழக அரசு அனுமதி கேட்டது. இதற்கு 15 மரங்களை வெட்ட தமிழகத்துக்கு அனுமதி வழங்கி கேரளா தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்திற்கு முதல்வர் முக. ஸ்டாலின் நன்றி தெரிவித்து கேரள முதல் மந்திரி பினராய் விஜயனுக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார்.

பின்னர் தங்களுடைய அனுமதி இல்லாமல் வனத்துறை அதிகாரிகள் தமிழகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கேரள வனத்துறை அமைச்சர் ஏகே. சசீந்திரன் கூறியிருந்தார். இந்த விவகாரமானது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகத்துக்கு மரம் வெட்ட கொடுத்த அனுமதியை கேரள அரசு ரத்து செய்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |