மாணவியிடம் அத்துமீறிய மெக்கானிக்கை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் ஆரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாமுவேல் என்ற மகன் இருக்கிறார். இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக இருக்கிறார். அதே பகுதியில் பிளஸ்-1 மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் சாமுவேல் மாணவியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது சாமுவேலுக்கும், மாணவிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இதனால் 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர்.
இதனை அவர்களது உறவினர்கள் கண்டித்தும் 2 பேரும் தொடர்ந்து பேசி வந்தனர். இந்த நிலையில் மாணவியிடம் திருமணம் செய்வதாக சாமுவேல் ஆசை வார்த்தைகளை கூறி அவரை ஊமாரெட்டியூரில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்றார். அப்போது மாணவியை சாமுவேல் கற்பழித்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சாமுவேலை கைது செய்தனர். மேலும் சாமுவேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.