சாக்கு மூட்டைக்குள் சடலமாக கிடந்த பெண் குறித்து காவல்துறையினர் ஒருவரை பிடித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.கே.நகர் லட்சுமி கார்டன் பகுதியில் உள்ள காலி இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சாக்கு மூட்டைக்குள் பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் மர்ம நபர் பெண்ணின் கழுத்தை மிதித்து கொலை செய்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 6 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் சாக்கு மூட்டை கிடந்த இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் தான் வைத்திருந்த சாக்கு மூட்டையை அந்த பகுதியில் வீசிச்சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது அந்த மோட்டார் சைக்கிள் கோவையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதை காவல்துறையினர் தெரிந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் கோவை விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஈரோட்டில் சாக்கு மூட்டைக்குள் சடலமாக கிடந்த பெண் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் கோவை மாவட்டத்தில் வேலை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் அந்த பெண் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து பிடிபட்ட நபரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.