அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பேரணி நடந்துகொண்டிருந்த சமயத்தில் கட்டுப்பாடின்றி வேகமாக வந்த வாகனம் மோதி ஒருவர் பலியானதோடு 23 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் என்னும் மாநிலத்தில் இருக்கும் வக்கிஷா என்னும் நகரில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கலை பேரணி நடத்தப்படும். அதன்படி, இந்த வருடத்தின் கலை விழா நேற்று உற்சாகமாக நடந்தது. இதில், குழந்தைகள், இளைஞர்கள் பலர், மகிழ்ச்சியோடு பாடல்கள் பாடிக்கொண்டு நடனமாடிச் சென்றார்கள்.
இதனை, நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்த்து ரசித்தார்கள். அந்த சமயத்தில் திடீரென்று அதிவேகத்தில் ஒரு வாகனம் வந்து பேரணியில் சென்றவர்கள் மீது, மோதியது. இக்கொடூர விபத்தில் ஒருவர் பலியானதோடு, 23 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்பு, தப்பிக்க முயற்சித்த ஓட்டுநரை காவல்துறையினர் பிடித்துவிட்டனர். தற்போது, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.