பாஜக அறிவித்துள்ள போராட்டத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஹெச். ராஜா இடம்பெறாமல் இருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது . கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காமல் உள்ளதால் பல கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில் பெட்ரோல் டீசல் மீதான விலை உயர்வை கண்டித்து வருகிற 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னிட்டு வருகிற 21-ஆம் தேதி பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் மக்களிடம் விளக்கும் வகையில் பாஜக முக்கிய நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்திக்கும் பட்டியலை அக்கட்சி தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த பட்டியலில் அக்கட்சியில் அண்மையில் சேர்ந்து தலைவராகிய அண்ணாமலையின் பெயர் முதல் அதிமுகவிலிருந்து பாஜகவில் சேர்ந்த சசிகலா புஷ்பாவின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா பெயர் இடம்பெறவில்லை. இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவரும் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள் என்றும், சசிகலா புஷ்பாவிற்கு இடம் கொடுத்து ஹெச் ராஜா ஓரம்கட்டப்பட்டாரா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. மேலும் மொத்தம் 14 மாவட்டங்களில் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதால், ஹெச் ராஜா சார்ந்துள்ள காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் டீசல் விலை உயர வில்லையா? என்ற விவாதமும் எழுந்துள்ளது.