சென்னையில் ஏற்கனவே பெய்த கனமழையால் மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக சென்னையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பேசியதாவது, தென்கிழக்கு அரபிக்கடலில் இருந்து வட கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக் கடல் வரை நிலவும் காற்றின் திசை மாறுதலின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி டெல்டா மாவட்டங்கள் கடலூர் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வீசக்கூடும். அதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்று அதில் கூறப்பட்டுள்ளது.