புவனேஷ்வரில் சாலையிலிருந்த 4 நாய்க்குட்டிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஓலா ஓட்டுநரை ஒடிசா மாநில காவல் துறை கைது செய்துள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஆனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்ஹு சரண் கிரி. இவர் ஓலா கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷைலஸ்ரீ விஹார் பகுதியில் சாலையில் அதிவேகமாக காரில் சென்றுள்ளார். அப்போது, சாலையிலிருந்த நான்கு நாய்க் குட்டிகள் மீது இரக்கமின்றி காரை ஏற்றியுள்ளார். இதைப் பார்த்த காவலர் அவரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தும், அதைக் கண்டுகொள்ளாமல் வேகமாகச் சென்றுள்ளார்.
இதனையடுத்து விலங்குகள் நலக் காப்பகம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஓலா ஓட்டுநரைக் கைது செய்தனர். அவர் மீது, விலங்குகள் மீதான கொடுமைத் தடுப்பு சட்டத்தின் ஐபிசி r/ w 11இன் 279, 429 மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் 184ஆவது பிரிவின் படியும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.