போலி ரசீது சீட்டு தயார் செய்து 12 லட்சம் ரூபாய் மோசடி செய்தது குறித்து 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பாரதியார் நகரில் கௌதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் நெல்லிகுத்தி தெருவிலும், காமயகவுண்டன்பட்டியிலும் அடகு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த இரண்டு கடையின் கணக்கு வழக்குகளை கார்த்திகா என்று பெண் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் உரிமையாளர் கவுதம் திடீரென கடையின் கணக்கு விவரங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது கடையில் போலியான ரசீது சீட்டுகள் தயார் செய்யப்பட்டு 12 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கவுதம் கார்த்திகாவிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். மேலும் கார்த்திகா அவரது கணவர் ஈஸ்வரன் மற்றும் உறவினர் இணைந்து கௌதமை மிரட்டி உள்ளனர். எனவே சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கௌதம் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து இதனை விசாரிக்க காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கார்த்திகா, ஈஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் உள்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.