தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.அதன்படி மேட்டூர் அணையானது முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் இருப்பதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு தற்போது வரும் நீர் வரத்து 21,000 கனஅடியாக உள்ள நிலையில் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக உள்ளது.நீர்வரத்து மேலும் அதிகரித்தால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதனால் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையை ஒட்டியுள்ள கிராமங்களான அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, சின்ன பள்ளம், பவானி மற்றும் காளிங்கராயன் பாளையம் ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லும் படியும் ஆற்றில் குளிக்க, துணி துவைக்க கூடாது எனவும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதனைப் போலவே பவானி ஆற்றங்கரையோரம் மக்களுக்கும் வருவாய்த் துறையினர் மற்றும் உள்ளாட்சி துறை யினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.