தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.8 அடியை எட்டியதால் அணையில் இருந்து எந்த நேரமும் உபரி நீர் திறக்கப்படும்.இதனால் உபரி நீர் வெளியேற்றப்படும் கால்வாயை ஒட்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.