கூலித் தொழிலாளி திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அண்ணாநகர் பகுதியில் கூலித்தொழிலாளி மணி வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் அவரது உறவினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்து விலக்கி வைத்தார். இதனையடுத்து மணி வீட்டிற்கு சென்றார். அப்போது மணி எனக்கு நெஞ்சு வலிப்பதாக தன் மனைவி லதாவிடம் கூறினார். இந்நிலையில் மணிக்கு நெஞ்சுவலி அதிகமாக இருந்ததால் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அதன்பின் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட மணி சிறிது நேரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து மனைவி லதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் “இரு தரப்பினர் இடையில் ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்து விட்டு என் கணவர் வீட்டிற்கு வந்தார். அதன்பிறகு அன்றைய தினமே நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென்று என் கணவர் உயிரிழந்து விட்டார். ஆகவே என் கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக” அவர் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.