தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக பூந்தமல்லி, போரூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னையில் பல இடங்களில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1913, 04425619206, 04425619207, 04425619208, ஆகிய எண்ணிற்கு கால் செய்தும், 9445477205 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலமும் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.