இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் நந்தகுமார் என்பவரும் திருமானூரிலுள்ள மின்வாரிய அலுவலகம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையிலிருந்த பதாகையில் வேகமாக மோதியதில் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இந்த விபத்தில் வெங்கடேசனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு வெங்கடேசனை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.