Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக விளையாட்டு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அரியலூரில் நடந்த சோகம்…!!

பண்டிகைக்கு சென்ற இடத்தில் குளத்தில் தவறி விழுந்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜமீன்மேலூர் என்னும் கிராமத்தில் கூலி தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிணி என்ற மகள் இருந்துள்ளார். பன்னீர்செல்வத்தின் சகோதரர் மகன் லோகேஷும் ஹரிணியும் அதே பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஹரிணி மருகாலங்குறிச்சி கிராமத்திலுள்ள தனது பாட்டி வீட்டில் வைத்து தீபாவளி பண்டிகையை கொண்டாட விரும்பியுள்ளார். இதனால் பன்னீர்செல்வம் அவரை அழைத்து செல்வதற்காக புறப்பட்டுள்ளார். அந்த சமயம் பன்னீர்செல்வத்தின் சகோதரரின் மகனான லோகேஷ் தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து பன்னீர்செல்வம், ஹரிணி மற்றும் லோகேஷ் இருவரையும் மருகாலங்குறிச்சியிலுள்ள தனது மாமியார் வீட்டில் விட்டு வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி தினத்தன்று தங்களுக்கு வாங்கிய புதிய ஆடைகளை அணிந்து கொண்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த நண்பர்களுடன் ஹரிணியும் லோகேஷும் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது விளையாட்டுப் போக்கில் லோகேஷ் குளத்துக்குள் இறங்க முயன்றபோது தவறி உள்ளே விழுந்து விட்டான். அந்த சிறுவனுக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் தண்ணீரில் தத்தளித்ததைக் கண்ட ஹரிணி அவரை காப்பாற்றுவதற்காக குளத்திற்குள் இறங்கியுள்ளார்.

அதன்பின் இருவரும் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இருவரும் அதிக நேரமாகியும் வெளியே வராததால் அவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் கத்தி கூச்சலிட்டனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று குளத்தில் குதித்து ஹரிணி மற்றும் லோகேஷ் ஆகியோரை சடலமாக மீட்டனர். இந்த தகவலை அறிந்த அவர்களது பெற்றோர் உடனடியாக மருகாலங்குறிச்சிக்கு விரைந்து சென்று சடலமாக மீட்கப்பட்ட தங்களது குழந்தைகளை கண்டு கதறி அழுதனர்.

இது குறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த குழந்தைகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்குமாறு அவர்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.ஆனால் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு இறந்த குழந்தைகளின் சடலத்தை காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்காக அவர்களின் பெற்றோர் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |