கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படையினருக்கும் இடையில் நடக்கும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏமன் நாட்டின் அதிபரான மன்சூர் ஹாதியின் நிர்வாகத்தில் உள்ள அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றது.
இந்த உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். மேலும் இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள மரிப் மாகாணத்தில் இருக்கும் மசூதி மற்றும் மதப்பள்ளியை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2 ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மசூதி மற்றும் மதப்பள்ளியில் இருந்த குழந்தைகள், பெண்கள் என்று மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.