காஷ்மீரில் மினி பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து நேரிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் தாத்ரி நகரிலிருந்து தோடா நோக்கி கிளம்பிய மினி பேருந்து சுய்கௌரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து உருண்டு ஓடியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இந்தக் கோர விபத்தில் பேருந்து படுமோசமாக சிதைந்துள்ளது. பேருந்தில் பயணித்த 11 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி அவர்களுக்கு தலா 2 லட்சம் நிதி வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.