திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் திறக்கப்பட்டுள்ளது.
உலகிலுள்ள பணக்கார கோவில்களில் ஒன்று திருப்பதி வெங்கடாஜலபதி கோவில். திருப்பதியில் இருப்பதை போன்று திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக காத்திருப்பு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் முதல் கட்டமாக பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ராஜகோபுரம் அருகில் இருந்த காவடி மண்டபம் பக்தர்கள் காத்திருக்கும் கூடம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் 408 பேர் அமரும் வகையில் இருக்கைகள், மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்விசிறிகள், போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பக்தர்கள் காத்திருப்பு கூடமானது நேற்று திறக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பின்னர் கோவில் இணை ஆணையர் அன்புமணி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இருக்கையில் அமர்ந்து தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல் தங்கத்தேர் ஓடாமல் இருந்தது.மேலும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து நாட்களிலும் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 6 மாதத்திற்கு பிறகு நேற்று மாலையில் கோவிலில் தங்கத்தேர் புறப்பட தொடங்கியது. இந்தத் தேரில் சுவாமி ஜெயந்திநாதர் மற்றும் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி தங்கத்தேர் கோவிலின் கிரிபிரகாரத்தில் வலம் வந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்..