மத்திய பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பரிசாக 8% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். வருகின்ற நவம்பர் மாதம் நான்காம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசுத் துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும் தீபாவளி போனசாக 8 சதவீதம் DA உயர்வு தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநில அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட DA தொகை 12 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை நவம்பர் மாதத்தில் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதனுடன் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வுகள் 50% தொகை அக்டோபர் மாதம் சம்பளத்துடன் சேர்த்து வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மீதமுள்ளவை 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்பளத்துடன் மார்ச் மாதத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.