சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்துவது குறித்து இன்று ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோயிலில் 300 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். திருக்கோயிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் இராஜகோபுரம் தெரியும் அளவிற்கு கட்டிடங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் இடமாக அன்னதான கூடம், பக்தர்கள் காத்திருக்கும் அறையில் டிவி, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும். 300 கோடி ரூபாயில் இதற்கான திட்ட பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.