அறநிலையத் துறை சார்பாக தொடங்க இருக்கின்ற சென்னை கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பு சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கூடுதலாக சென்னை, திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை அடுத்து பேராசிரியர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தூய்மைப் பணியாளர் ஆகிய பணிகளுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இந்தப் பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பிற மதங்களை சேர்ந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசின் இந்த அறிவிப்புக்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி வழக்கறிஞர் வேல்முருகன் கூறியதாவது, இந்து மத நிறுவனங்களின் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பணிபுரிய வேண்டும் என்பது இந்து மத சட்டம் தெரிவிப்பதாக கூறுகின்றார். இருப்பினும் கல்வி நிறுவனங்களில் இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் பணி புரிய வேண்டுமா என்பதில் ஒரு தெளிவு இல்லை என்றும் தெரிவிக்கிறார்.
மேலும் இது பற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, கல்வி நிறுவனத்தில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்பது மதசார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரான ஒரு செயல் என்கிறார். எனவே மதக் கல்வி நிறுவனங்களில் அனைத்து மதத்தினரும் பணியாற்றும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக சிறுபான்மையினர் நடத்தி வரக்கூடிய பள்ளிகள், கல்லூரிகளில் பல இந்துக்கள் பணியாற்றிவரும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.