முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் குணமடைந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மன்மோகன்சிங்கிற்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. மேலும் சோர்வாக காணப்பட்ட அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மன்மோகன் சிங்கை டாக்டர் நிதிஷ் நாயக் தலைமையிலான குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டுமென இறைவனிடம் பிரார்த்திப்பதாக தெரிவித்திருந்தார்.
தற்போது மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது. இந்த சூழலில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று மன்மோகன்சிங்கின் உடல் நலம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மன்மோகன் சிங் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக கூறினார். மேலும் விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் எனவும் அவர் தெரிவித்தார்.