தூத்துக்குடியைச் சேர்ந்த தம்பதியினர் தொலைக்காட்சியில் சுர்ஜித் மீட்பு பணியை பார்த்துக் கொண்டு அலட்சியமாக இருந்ததால் அவர்களது 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன், நிஷா ஆகிய தம்பதிக்கு ரேவதி சஞ்சனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் நேற்றையதினம் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணி குறித்து தொலைக்காட்சியில் கண்ணிமைக்காமல் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அவர்கள் அருகில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தை ரேவதி சஞ்சனா திடீரென மாயமாகியுள்ளார். இதையடுத்து குழந்தையை வீடு முழுவதும் தம்பதியினர் தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் குழந்தை காணாததால் பதற்றமடைந்து சோதனையை தீவிரப்படுத்த, லிங்கேஸ்வரன் குளியல் அறைக்குள் நுழைந்து சோதனையிட்டார். அப்பொழுது குளியல் தொட்டிக்குள் குழந்தை தலைகீழாக கவிழ்ந்து மயக்க நிலையில் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அங்கு சென்றதும் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு பரிதாபப்பட்ட தம்பதியினர் அலட்சியத்தால் அவர்களது 2 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.