Categories
மாநில செய்திகள்

 வள்ளலார் பிறந்த நாள் இனி “தனிப்பெருங்கருணை நாள்”… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

வள்ளலார் பிறந்த நாள் இனி ‘தனிப்பெருங்கருணை நாளாக’ கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

முதல்வர் மு.க ஸ்டாலின், வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெரும்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்..

இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823 இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார்.. அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார்.

இவர் வடலூரில் சத்திய ஞான சபையை எழுப்பினார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய இவர் மக்களின் பசித்துயர் போக்க சத்ய தர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது. மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகள் எழுதினார்.

இவர் பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.  திருவருட்பா 6ஆம் திருமுறையில் எந்த சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மத நெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர் சத்திய தரும சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார்.

பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற ஆத்ம நேய ஒருமைப் பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அவர் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாள் என கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

 

 

Categories

Tech |