சென்னை, காஞ்சிபுரம், வேலூர் என 30 இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
1926ஆம் ஆண்டு பச்சையப்ப முதலியார் என்பவரால் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்ட பச்சையப்பாஸ் துணிக்கடை, அந்தப் பகுதியில் பிரபல கடையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இருக்கும் பச்சையப்பாஸ் துணிக்கடை, செங்கல்வராயன் சில்க்ஸ், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் காலை 8 மணியிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. காஞ்சிபுரத்தில் மட்டும் மொத்தம் 8 இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 54 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வேலூர் தோட்டப்பாளையத்திலுள்ள பச்சையப்பாஸ் சில்க்ஸ், சென்னை தியாகராய நகரில் உள்ள பச்சையப்பாஸ் சில்க்ஸ் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. மொத்தமாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர் என 30 இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 8 மணியிலிருந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்..
முதல்கட்டமாக வரி ஏய்ப்பு மற்றும் ஜவுளி மொத்த வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. காந்தி சாலையில் பொதுமக்கள் ஜவுளி எடுக்க வந்தபோது, கடை பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் வாசலில் நின்று கொண்டிருந்தனர்.. அப்போது அவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்பிவிட்டு, கடைக்குள் சென்று கடையை பூட்டிவிட்டு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.