உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா உட்பட 4 முக்கியமான விவசாயிகள் சங்கங்கள் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.. அந்த கடிதத்தின்படி, இந்த லக்கிம்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம் என்று புகார்கள் வந்து இருக்கக் கூடிய நிலையில், அந்த இணை அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். அவரது மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரிக்கையானது வைக்கப்பட்டுள்ளது..
மேலும் இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதை உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பின்புலம் மிக அதிகமாக இருக்கக்கூடிய உ.பியில் எந்தவித சமரசமும் ஏற்பட்டுவிடாமல் உயிரிழந்த 4 விவசாயிகளுக்கு நியாயம் கிடைப்பதற்கும், வன்முறையை யார் யாரெல்லாம் தூண்டினார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.. இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..
முன்னதாக உ.பி லக்கீம்பூர் கெர்ரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் கேசவ் மெளரியா கலந்து கொள்ள இருந்தார்.. இதனையறிந்த விவசாய சங்கத்தினர் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யகோரி அவருக்கு கருப்புகொடி காட்ட திரண்டனர்..
அப்போது முதல்வரை வரவேற்க அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் கார் சென்றபோது, அவரையும் விவசாயிகள் வழிமறித்து கருப்புக்கொடி காட்டியுள்ளனர்.
ஆனால் மத்திய அமைச்சர் மகன் கூட்டத்தில் புகுந்து இடித்து தள்ளி காரை எடுத்து சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. கார் மோதியதில் 4 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம் தெரிவித்திருந்தது.. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மத்திய அமைச்சர் மகனின் கார் உட்பட 3 காரை அடித்து உடைத்து நொறுக்கி தீ வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் வன்முறை ஏற்பட்டது..
இந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.. லக்கிம்பூர் பகுதியில் இந்த வன்முறைச் சம்பவத்தில் நிறைய பேர் படுகாயமடைந்து இருப்பதாக முதல்கட்ட தகவல் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.