Categories
தேசிய செய்திகள்

பவானிபூர் இடைதேர்தலில் வெற்றி… நன்றி சொன்ன முதல்வர் மம்தா பானர்ஜி!!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்..

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.. ஆனாலும் நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.. இருப்பினும் முதல்வராக மம்தா பதவியேற்றார்.அதே சமயம் 6 மாதத்திற்குள் மம்தா பானர்ஜி எம்எல்ஏவாக வேண்டும் அப்படியானால் தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்..

இதற்கிடையே பவானிபூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சோபன்தேப்  தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பவானிபூர், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய 3  தொகுதிகளுக்கு கடந்த 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பவானிபூர் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் களமிறங்கினார்.

இந்த நிலையில் பவானிபூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை என்பது இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.. தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வந்தார்.. இந்த சூழலில் 21  சுற்றுகளின் முடிவில் பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்..

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.. மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகளும் பெற்றனர்..

மற்ற 2 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. இதன்மூலம் இன்னும் நான்கரை ஆண்டு காலம் மம்தா பானர்ஜி பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.

வெற்றிக்குப்பின் முதல்வர் மம்தா பானர்ஜி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், தமக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. வெற்றி பெற கடுமையாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி. நந்திகிராமில் தாம் தோல்வியடைந்தது ஒரு சதி என்று பேசினார். மேலும் அவர் மற்ற 2 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறும் என கூறினார்..

வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. ஏற்கனவே மம்தா பானர்ஜி 2 முறை பவானிபூர் தொகுதியில் வென்ற நிலையில், 3 ஆவது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது..

 

Categories

Tech |