சென்னையில் இயற்கையின் மீது கொண்ட காதலின் காரணமாக தனது வீட்டில் 350க்கும் மேற்பட்ட மருத்துவ குண செடிகளை 35 வருடங்களாக வளர்த்து வீட்டை பசுமைகுடிலாக மாற்றியுள்ளார் ஜஸ்வந்த்சிங்.
சென்னை முகப்பேர் அருகே வசித்து வருபவர் ஜஸ்வந்த் சிங். இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வீட்டில் 350க்கும் மேற்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த செடிகளை பராமரித்து வளர்த்து வருகிறார். மருத்துவச் செடிகளோடு, பழம், காய்கறிகளை வழங்கும் செடிகளையும் அவர் வளர்த்து வருகிறார். மேலும் வீட்டின் மாடியில் சூரிய மின்சக்தி, மரவீடு என தன் வீடு முழுவதுமே பசுமைகுடில் ஆக மாற்றி அதன் மூலம் பயனடைந்தும் வருகிறார். இவரது செயலுக்கு சென்னை மாநகராட்சி பாராட்டி விருது ஒன்றை அளித்துள்ளது.
பின் இது குறித்து பேசிய அவர், மரங்கள், செடிகள் ஆகியவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். அவற்றை பாதுகாக்க தவறினால் அது நம் பிற்காலத்தில் வரக்கூடிய சந்ததியினரை ஏமாற்றுவதற்கு சமம். மேலும் மரம், செடி, கொடிகள் ஆகியவை நாம் பேசுவதைக் கேட்கக் கூடிய திறன் கொண்டவை. ஆனால் அவற்றால் பேச முடியாது. எந்த அளவுக்கு நாம் அவர்களுக்கு நன்மை அளிக்கிறோமோ அதைவிட இரண்டு மடங்கு நன்மையே அது நமக்கு அளிக்கும். சென்னையில் தண்ணீர் பஞ்சம் வந்தபோது எங்கள் ஏரியாவை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் இல்லை மிகவும் சுத்தமான குடிநீரை பகிர்ந்து கொண்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.