உடல்நலக்குறைவால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள கூனவேலம்பட்டி அருகே உள்ள பாலப்பளையம் கிராமத்தில் ராமன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த ராமன் கடந்த 25ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் மயக்கமடைந்த ராமனை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் முதியவரை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராமன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற புதுசத்திரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.