தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.
முன்னதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டதாவது, அக்டோபர் – டிசம்பர் வரை மழை காலம் என்பதால் தேர்தல் நடத்துவது சிரமம், கொரோனாவால் அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.. இவை தவிர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற இரண்டரை மாத காலம் அவகாசம் தேவை.. புதிதாக மாநகராட்சி, நகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக 7 மாத அவகாசம் தேவை. அதாவது 2022 ஏப்ரல் மாதம் வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு சற்று முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும். தேர்தலை நடத்துவதற்கு கட்டாயம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டது..
இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது என்று கூறிய உச்ச நீதிமன்றம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநிலத்துக்கு 4 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது.