தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் திலீப்பின் நினைவு தினத்தையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 7 ஆண்டுகளில் பாஜக அரசு ஈழ தமிழர்களுக்கு ஒரு அங்குலம் கூட நன்மை செய்யவில்லை என தெரிவித்தார். மேலும் ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கு தமிழக அரசு, அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஆறேழு ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி ஒரு அங்குலம் கூட, ஈழத் தமிழர் நலன்களில் முன்னேறிச் செல்லக் கூடிய வகையில், நலம் விழையக் கூடிய வகையில், எந்த அசைவையும், எந்த நகர்வையும் செய்யவில்லை. தமிழக அரசு ஆணவக் கொலைகளை தடுப்பதற்குரிய சட்டம் இயற்றவேண்டும். ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. எந்த மாநில அரசும் அதை பின்பற்றுவதில்லை. ஆணவ கொலைகளை செய்தவர்களை தண்டிப்பது, ஒரு வகையில் ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருந்தாலும், ஆணவ கொலைகளை நடைபெறாமல் இருக்க கூடிய வகையில் தடுக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமான இன்றியமையாத ஒரு செயலாகும் என்று பேசியுள்ளார்.