சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் பிரியப் போகிறார்கள் என வதந்தி பரவி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும், தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு வந்த சமந்தாவிடம் நிருபர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது அவர் பதில் அளிக்காமல் கோபப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய நாக சைதன்யா ‘நான் சிறுவயதிலிருந்தே தனிப்பட்ட வாழ்க்கை வேறு, திரைத்துறை வாழ்க்கை வேறு என்று பார்த்து வளர்ந்தவன். என்னுடைய தாய் தந்தையிடமிருந்து இந்த பழக்கம் எனக்கு வந்தது. அவர்கள் இருவரும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி பேசமாட்டார்கள். அந்த நல்ல பழக்கத்தை நானும் கடைப்பிடித்து வருகிறேன். சமந்தாவுடன் நான் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்தி பரவி வருவது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க உடனே மற்றொரு செய்தி வந்துவிடுகிறது. ஒரு செய்தி இன்று பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படும், முந்தைய நாள் செய்தி மறந்து போய்விடும். இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன் இதுகுறித்து நான் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன்’ என கூறியுள்ளார்.