வேட்புமனு விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் நான்கு நபர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவற்றில் விண்ணப்பப்படிவங்கள் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி பா.ஜ.க வேட்பாளர் குழந்தைவேலு உள்பட 4 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தி.மு.க, நாம்தமிழர் கட்சி உள்பட 3 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-வினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை முற்றுகையிட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இரு கட்சியை சேர்ந்த 19 நபர்களை கைது செய்துள்ளனர். அதற்குப் பிறகு பா.ஜ.க வேட்பாளர் குழந்தைவேலு வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து ஒன்றிய தலைவர் சேகர் மற்றும் சுந்தர் ஆகியோர் தலைமையில் அலுவலகத்தை பா.ஜ.க-வினர் திடீரென முற்றுகையிட்டுள்ளனர்.
அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க கோரி கோஷங்கள் எழுப்பி உள்ளனர். பின்னர் இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க ஒன்றிய தலைவர்கள் சேகர் உள்ளிட்ட 27 நபர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.