தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதை தொடர்ந்து நாளை வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரையில் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்றும், நாளையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.