விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்கிய குற்றத்திற்காக காவல்துறையினர் 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளனர்.
சென்னை வடக்கு சரக துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் ஆணையின்படி திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் உள்பட மற்றும் பிற அலுவலர்கள் பட்டரைபெருமந்தூர், மப்பேடு, பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்குகள் மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
இந்நிலையில் அனுமதிக்கு புறம்பான வாகன இயக்கம், சாலைவரி சரியாக கட்டாத மற்றும் தகுதிச் சான்று முடிந்த நிலையில் இருக்கும் வாகனத்தை ஓட்டுவது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். அதோடு முறையான சான்றிதழ்கள் இல்லாதது, சாலை வரி செலுத்தாது போன்ற குற்றங்களுக்காக 4 வண்டிகளை பறிமுதல் செய்து மப்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் அபராதமாக 9 தனியார் நிறுவன வாகனங்களோடு சேர்த்து 17 வாகனங்களுக்கு இணை கட்டண வசூலாக 1 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயும், சாலை வரி விலக்காக 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக 4 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.