மாணவச் செல்வங்கள் யாரும் அவசரப்பட்டு தகாத முடிவுகளை எடுக்க வேண்டாம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் நம்மால் வெற்றி பெற இயலாது என்ற விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ளதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு காலங்களில் இதுவரை இந்த வாரத்தில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது நம் மனம் கலங்க வைக்கிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் கண்டிப்பாக இதற்கு ஒரு விடியல் ஏற்படும் ஏனெனில் இதனை ஒழிப்பதில் மு.கஸ்டாலின் காட்டும் உறுதியும் உத்வேகமும் உண்மையானதாக இருக்கின்றது. மருத்துவ படிப்பிற்கு உள்ள அனைத்து தடைகளை நீக்க ஒரு தொடர் முயற்சியை எந்தவித தொய்வின்றி மேற்கொள்ள திராவிடர் கழகம் தன்னை ஒருங்கிணைப்பாளர் ஆக்கிக்கொண்டு அனைத்து ஒத்த கருத்துள்ள தமிழ்நாட்டு கட்சிகள் அமைப்புகளை அழைத்து பல கட்ட போராட்டங்கள் பற்றி யோசித்து முடிவெடுக்கும் கூட்டு முயற்சியில் ஈடுபட வருகின்ற 21 ஆம் தேதி அனைவருக்கும் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.
மேலும் சென்னை பெரியார் திடலில் அந்தக் கூட்டம் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. அதில் திட்டங்கள் அறிவிக்கப்படும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு வலுவூட்டி நீட் கொடுவாள் மாணவர் தலைமேல் தொங்குவதை நீக்குவதற்கும் மாநில உரிமைகளை காக்கும் முயற்சிகளில் உறுதியாக இருப்பதற்கு சட்ட போராட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது பற்றியும் சிந்தித்து முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் அமையும்.
அதனால் மாணவ செல்வங்கள் யாரும் அவசரப்பட்டு தகாத முடிவுகளை எடுக்க வேண்டாம். தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தன்னம்பிக்கையோடு நீட்டை வெற்றி பெறுவோம் என்று உறுதியோடு நம்பி கல்வி கற்க முனையுங்கள் என்று கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.