கமலேஷ் திவாரி கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான ஹிந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி, நேற்று முன்தினம் கழுத்து அறுக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் இனிப்புப்பைகளுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் வீட்டுக்குள் சென்ற கொலையாளிகள் தீபாவளிக்கு இனிப்புகள் வழங்கச் செல்வதாகக் கூறி வீட்டிற்குள் சென்றிருக்க வேண்டும் என்றும், இனிப்பு பைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்து எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் சந்தேகித்திருந்தனர். இந்நிலையில், இன்று கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக சூரத்தைச் சேர்ந்த மூவரை உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், மவுலானா மொஹ்சின் ஷேக் (24), குர்ஷித் அகமது பதான் (23) பைசன் (21) என அடையாளம் காணப்பட்டனர்.இதையடுத்து கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் அருண் பதாக் ஒரு காணொலிப் பதிவை வெளியிட்டார். அதில்அவர், “கொலையாளைகளின் தலையை எடுப்பவரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என்று கூறினார். இவரின் சர்சை பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.