ஆப்ரிக்க நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ்.ஜி.எஸ் பயங்கரவாத அமைப்பினர் மீது பிரெஞ்சு படையினர் தாக்குதல் நடத்தி வந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவில் உள்ள பமாகோ,மாலி ,பர்கினோ பாசோ ,நைஜர் போன்ற நாடுகளில் ஐ.எஸ்.ஜி.எஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமிக் ஸ்டேட்டின் கிரேட்டர் சஹாரா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவராக அதான் அபு வாலிட் அல் ஷராவி செயல்பட்டு வருகிறார். இதனை அடுத்து பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்களை தடுக்கும் வகையில் மாலி, பர்கினோ பாசோ, நைஜர் போன்ற நாடுகளுக்கு பிரான்ஸ் அரசு உதவி செய்துள்ளது . இதற்காக மாலியில் பிரெஞ்சு படைகள் குவிக்கப்பட்டுள்ளன .
இந்த நிலையில் பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் மாலியில் இருக்கும் ஆப்ரிக்கா ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின்மீது தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் ஆப்ரிக்க ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அதான் அபு வாலிட் அல் ஷராவி உயிர் இழந்துள்ளார். இது குறித்த தகவலை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக ஐ.எஸ்.ஜி.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் கொல்லப்பட்டதை தொடர்ந்து , மாலியில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை பிரான்ஸ் தொடர்ந்து செய்யும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார்.