இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தாடிச்சேரி செல்லாயம்மன் கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வனிதா, பாப்பு ஆகியோருக்கும் இடையே கடந்த மே மாதம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் வனிதா, பாப்பு ஆகியோரின் உறவினர்கள் இணைந்து முருகனை தாக்கியுள்ளனர். இதனை பார்த்த முருகனின் உறவினர்கள் வனிதாவை கண்டித்துள்ளனர். இதனையடுத்து இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.
அப்போது அங்கிருந்த முருகனின் உறவினர் ரவிச்சந்திரன் என்பவரது மகனான சக்திவேலை கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து சிறுவனின் தந்தை ரவிசந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் வீரபாண்டி காவல்துறையினர் இருதரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்து சிறுவனை தாக்கிய முத்தையா, குமரேசன், செயசீலன், பழனிசாமி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சக்திவேல் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதனையடுத்து காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்த வனிதாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.