கால்நடை கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற கார் விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள எட்டிகுட்டைமேடு பகுதியில் நவநீதன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் அரசு கால்நடை கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீதன் மற்றும் அவரது நண்பர்களான நந்தகுமார், சபரி சந்துரு, லட்சுமணன், கோவர்த்தனன், சங்கர், போகன் ஆகிய 7 மாணவர்களும் விடுமுறை தினத்தை கொண்டாட ஊட்டிக்கு சுற்றுலா செல்ல நினைத்துள்ளனர். அதன்படி நந்தகுமார் என்பவரது காரில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
அப்போது நாமக்கல் பல்லக்காபாளையத்தில் உள்ள சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 7 மாணவர்களும் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் கார் கவிழ்ந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே துரதிஷ்டவசமாக நவநீதன் உயிரிழந்துள்ளார். மேலும் நந்தகுமார், சபரி சந்துரு, லட்சுமணன், கோவர்த்தனன், சங்கர், போகன் ஆகிய 6 பேரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற குமாரபாளையம் காவல்துறையினர் நவநீதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.