மனைவி செய்த டார்ச்சர் காரணமாக கணவன் 21 கிலோ உடல் எடை குறைந்ததாக கூறி விவாகரத்து கேட்டுள்ளார்.
அரியானா மாநிலம், ஹிசார் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவர் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கணவன் குடும்ப நல நீதிமன்றத்தில் தனக்கு மனைவியிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது: “தனக்கு சற்று குறைவாக காது கேட்கும் என்பதால் காது கேட்கும் கருவியை பயன்படுத்தி வந்தேன். இதன் காரணமாகவே அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தார். சிறிது நாட்களில் இது எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பி இருந்தேன். ஆனால் அவரது நடத்தையில் சிறிது கூட மாற்றம் ஏற்படவில்லை. நான் திருமணம் செய்து கொள்ளும் பொழுது 74 கிலோவாக இருந்தேன், ஆனால் தற்போது எனது எடை 53 கிலோவாக குறைந்துள்ளது. இதற்கெல்லாம் எனது மனைவியின் டார்ச்சர் தான் காரணம் என கூறி, தனக்கு விவாகரத்து அளிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த மனைவி தனது கணவருடன் தான் எப்போதும் அன்பாக இருந்ததாகவும், ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி கணவருக்கு, அவரது மனைவியிடமிருந்து விவாகரத்து கொடுத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மனைவியின் சித்திரவதை காரணமாக 21 கிலோ எடை குறைந்தவரின் விவாகரத்தை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அந்த பெண் தாக்கல் செய்த அனைத்து மனுவையும் தள்ளுபடி செய்தது.