மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இந்திய மாணவர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநில துணைச் செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் கல்லூரிகளை திறப்பதற்கு முன்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுகுறித்து மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அரசு துரிதமாக செயல்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் எனவும், இதுகுறித்து மருத்துவ குழு பரிந்துரை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனையடுத்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் விடுதிகள் திறப்பது குறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும், விடுதி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகளில் இடைநின்ற மாணவர்களை திரும்ப வரவழைக்க திட்டம் வகுக்கவும், காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் அதிக கல்வி கட்டணம் வசூலித்த தனியார் கல்வி நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.