ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வரும் 26ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள வெளிநாட்டவர்கள் வெளியேறி வருகின்றனர். இந்திய விமானப்படை விமானங்கள் தஜியஸ்தான் சென்று காபூலில் இருந்து இந்தியர்களை தொடர்ந்து அழைத்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக விளக்கம் அளிக்க அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு வரும் 26ஆம் தேதி கூட்டியுள்ளது.
இந்தியர்களை மீட்பது தொடர்பாக எதிர்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதுடன், இதுவரை மீட்கப்பட்டவர்கள் விவரங்களையும் மத்திய அரசு இந்த கூட்டத்தில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற கட்சி தலைவர்களிடம் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து எடுத்து கூறுமாறு மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இதனை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்சி தலைவர்களுக்கு விளக்கம் அளிப்பது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தேவையான நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் அதில் கூறிப்பிட்டுள்ளார்.