அவமானம் தாங்க முடியாமல் பாஜகவில் இருந்து விலகுவதாக, மேற்கவங்க நடிகை ரூபா பட்டாச்சார்ஜி கூறினார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நடிகை ரூபா பட்டாச்சார்ஜி, பாஜக கட்சியில் பணியாற்றி வந்த நிலையில், திடீரென அந்த கட்சியில் இருந்து விலகிவிட்டார். தொடர்ந்து, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அதிருப்தி பதிவுகளை பதிவு செய்துள்ளார்.
அதில்,‘நடிகையாக இல்லாமல் நான் ஒரு சமூக ஆர்வலராக இருந்து வருகிறேன். கொரோனா இரண்டாவது அலையின்போது, நிறைய சமூக சேவைப் பணிகளை செய்தேன். நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததால், நான் அக்கட்சியில் இருந்து விலகவில்லை. நான் சந்தித்த அவமானங்களால் கட்சியில் இருந்து விலகுகிறேன். பாஜக பொதுச் செயலாளர் சயந்தன் பாசு என்னை கடுமையாக திட்டினார். அவரிடம் அதற்கான காரணம் கேட்டேன். ஆனால் அவர் எதுவும் சொல்ல மறுக்கிறார். அது, எனக்கும் மிகவும் அவமதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்’ என்று கூறிஉள்ளார்