விழுப்புரத்தில் திடீரென மாணவன் வாந்தி மயக்கத்துடன் மரணித்தது குறித்து காவல்துறைனர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதி அருகே வசித்து வருபவர் பழனி. இவரது மகன் ஆகாஷ் என்பவர் மணலூர்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் ஆகாஷ் இன்று பள்ளிக்கு சென்றுள்ள நிலையில், பள்ளியில் வைத்து திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். பின் பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷின் பெற்றோரை தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரவழைத்தனர். அங்கு வந்த பெற்றோர்கள் ஆகாஷை மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
வீட்டிற்கு சென்ற பொழுதும் ஆகாஷ் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். பின் அவனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க உறவினர்களும் பெற்றோர்களும் கதறி அழுதனர். பின் காவல் நிலையத்தில் இது குறித்து உறவினர்கள் புகார் அளிக்க வழக்குப்பதிவு செய்து மாணவனின் மரணம் குறித்து விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.